Pages

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013


விருதுநகர் மாவட்டத்தில், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் ஏராளமோனோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றனர்.
பயன் தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் : விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்
தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலைகளைப் பெறுவதற்கு ஏதுவாக, கல்லூரி நிர்வாகங்கள் கேம்பஸ் இண்டர்வியுக்களை நடத்தும் கலாச்சாரம் இருந்துவந்தது. தற்போது அந்த கலாச்சாரம் சற்றே பரிணாமம் அடைந்து, தங்கள் கல்லூரி மட்டுமல்லாமல், பல கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையிலான வேலைவாய்ப்புகள் நடத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது.

இத்தகைய முகாம் ஒன்று, விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ரிலையன்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ், ஜெயராஜ் குரூப், ஷார்ப், அகரம் சர்வீஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் 1400 மாணவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
குழு விவாதம், நேர்முகத் தேர்வு : தேர்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சி
இந்த முகாமில் கலந்துகொள்ள வெளியூர்களில் இருந்து வந்திருந்த மாணவர்களுக்கு தேவையான அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது நிறுவனம் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறி, அதற்குப் பின்னரே நேர்காணலை நடத்தினர். வாய்மொழித் தேர்வு, உரையாடல், துறை சார்ந்த அறிவு ஆகியவற்றைச் சோதிக்கும் விதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் பணிகளை சிறப்பாக செய்யத் தேவையான பயிற்சிகளையும் வழங்குவதாக தெரிவிக்கின்றனர் நிறுவன நிர்வாகிகள்.
படிப்பு, திறமைக்கேற்ற வேலைகள் : எல்லா கல்லூரியிலும் வேலை முகாம்
நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனங்களுக்கே வந்து வேலைவாய்ப்பை அளித்தது, சிறப்பான அணுகுமுறை என்கின்றனர் மாணவர்கள். தகுதி, திறமைக்கேற்ப, வேலையில் சேர வாய்ப்பளிக்கும் இத்தகைய திட்டங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே கிராமப்புற மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment