கிராமப்புற வங்கிகளில் ஏற்படும் கிளார்க் (அசிஸ்டன்ட்) மற்றும் அதிகாரி வேலைக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் ஐ.பீ.பி.எஸ். பொது எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 25–7–13 கடைசி நாளாகும்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுகிறது. இது ஐ.பீ.பி.எஸ். என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. முதலில் பொதுத்துறை வங்கிகளுக்காக இந்த அமைப்பு பொது எழுத்து தேர்வு நடத்தி வந்தது. கடந்த ஆண்டில் எழுத்து தேர்வுடன் பொது நேர் காணலும் நடத்தியது. ஐ.பீ.பி.எஸ். நடத்தும் பொது எழுத்து தேர்வு முடிவுகளை சில தனியார் வங்கிகள் கூட பயன்படுத்திக் கொண்டன.
இதேபோல கிராமப்புற வங்கிகளுக்கும் பொது எழுத்து தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2012–ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் முதல் பொது எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தற்போது மண்டல கிராமப்புற வங்கிகளுக்கான (ஆர்.ஆர்.பி.) 2–வது பொது எழுத்து தேர்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இது ஆபீஸ் அசிஸ்டன்ட் (கிளார்க்) மற்றும் அதிகாரி (ஆபீசர்) பணிக்கான எழுத்து தேர்வாகும்.
